எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

அன்பு இல்லாமல் பயனில்லை

எனது ஸ்பெஷல் ஆர்டர் மேஜைக்கான துண்டுகளை பெட்டியிலிருந்து எடுத்து என் முன் வைத்த பிறகு, ஏதோ சரியாக இல்லை என்பதை நான் கவனித்தேன். மேஜை அனைத்து அம்சங்களும் இருந்தது, ஆனால் அதின் கால்களில் ஒன்றைக் காணவில்லை. ஒரு கால் இல்லாமல், என்னால் மேஜையை வடிவமைக்க முடியவில்லை. அது பயனற்றதாகிவிட்டது.

ஒரு முக்கிய பகுதியைக் காணவில்லையெனில் உபயோகமாக இல்லாமல் இருப்பது மேசை மட்டுமல்ல. 1 கொரிந்தியர் புத்தகத்தில், பவுல் தனது வாசகர்களுக்கு ஒரு அத்தியாவசியமான முக்கியப் பகுதி அவர்களிடம் காணவில்லை என்பதை நினைவூட்டினார். விசுவாசிகள் பல ஆவிக்குரிய வரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களிடத்தில் அன்பு இல்லை. 

தனது கருத்தை வலியுறுத்த மிகைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, பவுல் எழுதினார். அவருடைய விசுவாசிகளுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் கொடுத்தாலும், அவர்கள் விருப்பத்துடன் கஷ்டங்களை அனுபவித்தாலும், அன்பின் அடிப்படையின்றி, அவர்களின் செயல்கள் அனைத்திற்கும் எந்த வித பிரயோஜனமும் இல்லை (1 கொரிந்தியர் 13:1-3). எப்போதும் பாதுகாக்கும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அன்பின் அழகை விவரிக்கும் வகையில், அவர்களின் செயல்களில் அன்பை எப்போதும் பிரதிபலிக்கவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தார் (வச. 4-7).

நாம் நம்முடைய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, ஒருவேளை நம்முடைய விசுவாச சமூகங்களில் கற்பிக்க, ஊக்குவிக்க அல்லது சேவை செய்ய, அன்பு பிரதானமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இது ஒரு கால் இல்லாத மேஜை போன்றது. அது வடிவமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை அடைய முடியாது.

இதைவிட பெரிய அன்பு இல்லை

2021 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79ஆம்; ஆண்டு நினைவு ஆண்டு. நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிப்பதற்காக நினைவுகூரப்படுகிறது. ஆகஸ்ட் 8, 1944 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பத்தில், காந்தி, “செய் அல்லது செத்து மடி” என்னும் தனது புகழ்பெற்ற வாக்கியத்தைக் கூறினார். மேலும், “நாம் இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் மரிப்போம்; எங்கள் அடிமைத்தனம் நீடிப்பதைக் காண நாங்கள் இருக்கமாட்டோம்” என்றும் கூறினார். 

தீமையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் தன்னைத்தானே வருத்திக்கொள்ள விழைவது கிறிஸ்துவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை..” (யோவான் 15:13). இந்த வார்த்தைகள் கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் போது சொல்லப்பட்டது. ஆனால் இந்த வகையான அன்பின் விலை மற்றும் ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்: ஒருவர் தனது உயிரை மற்றொரு நபருக்காக விருப்பத்துடன் தியாகம் செய்யும் போது ஒரு அன்பு எடுத்துக்காட்டப்படுகிறது. மற்றவர்களை தியாகமாக நேசிக்க இயேசுவின் அழைப்பு “ஒருவருக்கொருவர் அன்புகூருங்கள்” (வச. 17) என்ற அவருடைய கட்டளையின் அடிப்படையாகும்.

வயதான குடும்ப அங்கத்தினரின் தேவைகளைக் கவனிப்பதற்கு நேரத்தைக் கொடுப்பதன் மூலம் ஒருவேளை நாம் நம்முடைய தியாகமான அன்பை வெளிப்படுத்தலாம். பள்ளியில் மன அழுத்தம் நிறைந்த வாரத்தில் நம்முடைய உடன்பிறந்தவர்களின் வேலைகளுக்கு உதவிசெய்வதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கலாம். வியாதிபட்டிருக்கும் குழந்தையை இரவில் பராமரிப்பதின் மூலம் கணவனோ, மனைவியோ தூங்குவதற்கு அனுமதிக்கும் உதவியை செய்யலாம். நாம் மற்றவர்களை தியாகமாக நேசிப்பதால், அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டைக் காட்டுகிறோம்.

வானத்து அப்பம்

ஆகஸ்டு 2020ல், ஸ்விட்சர்லாந்தின் ஓல்டன் பகுதியில் உள்ள மக்கள், சாக்லேட் மழை பெய்ததால் திடுக்கிட்டனர்! அங்கிருந்த ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அங்கிருந்த சாக்லேட் மூலப்பொருட்கள் காற்றில் கலந்தன. அதின் விளைவாக அங்கிருந்த சாலைகள் மற்றும் கார்களின் மீது அவை படிந்து, அந்த இடமே சாக்லேட் மணம் வீசக்கூடியதாக மாறியது. 

அதேபோன்று வானத்திலிருந்து மிகவும் ருசியான உணவு அதிசயவிதமாய் பொழிகிறதென்றால், யாத்திராகமத்தில் தேவன், இஸ்ரவேலர்களை போஷித்த விதத்தை எண்ணி ஆச்சரியப்படுகிறேன். எகிப்திலிருந்து தப்பிப் பிழைத்து, வனாந்திரத்தில் ஆகாரமும் தண்ணீருமின்றி கடினமான சவால்களை இஸ்ரவேலர்கள் சந்திக்கின்றனர். ஜனங்களின் அவலநிலையால் மனதுருகின தேவன், “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்று வாக்குப்பண்ணுகிறார். அடுத்த நாள் காலையில் பூமியின் மீது ஒரு மெல்லிய படிவம் படிந்தது. அன்றிலிருந்து, அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து தேவன் மன்னாவை வருஷிக்கப்பண்ணுகிறார். 

இயேசு பூமியிலிருந்த நாட்களில், ஒரு பெரிய கூட்டத்தை போஷித்ததைப் பார்த்த மக்கள், அவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்ப ஆரம்பித்தனர் (யோவான் 6:5-14). ஆனால் இயேசு, தற்காலிகமான பசியை அல்ல, நித்திய ஜீவனை அளிக்கும் (வச. 51) “ஜீவ அப்பம் நானே” (வச. 35) என்கிறார்.

ஆவிக்குரிய போஷாக்கிற்காய் பசியோடிருக்கும் நமக்கு இயேசு, தேவனுடனான முடிவில்லா வாழ்வளிக்கிறார். அதுபோன்ற ஆழமான மனதின் ஏக்கங்களை திருதிப்படுத்தவே அவர் வந்தாரென்று அவரை நம்பி, விசுவாசிப்போமாக.

பூமி தினத்தில் நன்றியுணர்வு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தினத்தன்று “பூமி தினம்” அனுசரிக்கப்படுகிறது. சமீப காலமாய், ஏறத்தாழ இருநூறு நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள் அன்றைய தினத்தில் பயிற்சி மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர். ஒவ்வொரு வருடமும், பூமி தினம் இத்தகைய வியத்தகு கிரகத்தை பராமரிக்கும் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் இந்த ஆண்டு நிகழ்வை காட்டிலும் மிகப் பழமையானது. அது சிருஷ்டிப்பின் நாட்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது.

ஆதியாகமத்தில், தேவன் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்து, மனிதன் வாழ்வதற்கு பூமியை சிருஷ்டித்தார் என்று அறிகிறோம். அவர் மலைச்சிகரங்களையும், பசுமையான சமவெளிகளையும் படைத்ததுமன்றி, தேவன் ஏதேன் தோட்டத்தையும் சிருஷ்டித்தார். அது உணவு, உறைவிடம், மற்றும் மகிழ்ச்சியை அதின் குடிகளுக்குக் கொடுக்கும் அற்புதமான ஒரு இடம் (ஆதியாகமம் 2:8–9).

தன் பிரதான படைப்பான மனிதனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் (வச. 8,22). பின், “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” (வச. 15) வேண்டுமென்ற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். ஆதாமும், ஏவாளும் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட பின்னர், தேவனுடைய சிருஷ்டிப்பைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாய் மாறியது (3:17–19). ஆனால் இந்நாள்வரைக்கும் தேவனே நம் பூமியையும், அதின் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார் (சங்கீதம் 65:9–13). நம்மையும் அதையே செய்யுமாறு எதிர்பார்க்கிறார் (நீதிமொழிகள் 12:10).

நாம் நெருக்கடியான நகரத்தில் வசிக்கிறோமோ அல்லது கிராமத்தில் இருக்கிறோமோ, தேவன் நம்மை நம்பிக் கொடுத்த பகுதிகளை பராமரிக்கும் கடமை நமக்குண்டு. தேவன் நமக்குக் கொடுத்த இந்த பூமி பரிசு என்னும் நன்றிக்கடனுக்காக அதை பராமரிக்கும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்போம்.

அவருடைய சமாதான சிலுவை

டச்சு ஓவியரான எக்பெர்ட் மோடெர்மன் வரைந்த “சிரேனே ஊரானாகிய சீமோன்”என்ற ஓவியத்தில் அவர் கண்கள் துயரத்தால் பிதுங்கியிருந்தன. சீமோனின் கண்கள் உடலளவிலும், மனதளவிலும் அவர் சுமந்த பொறுப்பின் தீவிர பாரத்தை வெளிப்படுத்தின. மாற்கு 15ம் அதிகாரத்தில், வேடிக்கைப் பார்த்த கூட்டத்திலிருந்து சீமோன் இழுக்கப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டதை அறியலாம்.

சீமோன், சிரேனே ஊரைச் சேர்ந்தவர் என மாற்கு நமக்கு அறிவிக்கிறார். அது இயேசுவின் காலத்தில் யூதர்கள் அதிகம் வசித்த வட ஆப்பிரிக்காவின் பெரிய நகரம். சீமோன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்கு வந்திருக்கலாம். அங்கே இந்த அநீதியான மரணதண்டனை நிகழ்வில் தானும் எதிர்பாராமல் பங்கேற்க, இயேசுவுக்கு சிறிய ஆனால் அர்த்தம் நிறைந்த உதவியை அவரால் செய்ய முடிந்தது (மாற்கு 15:21).

முன்னதாக மாற்குவின் சுவிசேஷத்தில், இயேசு தம் பின் செல்பவர்களிடம், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (8:34) என்றார். இயேசு தம் சீஷர்களிடம் அடையாளமாகச் சொன்னதை, கொல்கொதாவின் வீதிகளில் சீமோன் நிஜமாகவே செய்கிறார்: தனக்களிக்கப்பட்ட சிலுவையை எடுத்து, இயேசுவுக்காக அதை சுமந்தார்.

நாமும் சுமக்கவேண்டிய “சிலுவைகள்” உண்டு. அது நோயாக இருக்கலாம், கடினமான ஊழிய பணியாயிருக்கலாம்; நாம் நேசித்தவரின் மரணமாயிருக்கலாம்; அல்லது நம் விசுவாசத்தினிமித்தம் வரும் உபத்திரவமாய் இருக்கலாம். நாம் இத்துன்பங்களை விசுவாசத்தில் சுமக்கையில், நாம் ஜனங்களை இயேசுவின் துயரங்களுக்கு நேராகவும், அவர் சிலுவை தியாகத்திற்கு நேராகவும் வழிநடத்துகிறோம். அவருடைய சிலுவையே நம்மை தேவனோடு ஒப்புரவாக்கி, நம்முடைய பயணத்தில் நம்மை பெலப்படுத்துகிறது.

அரட்டைப் பேருந்து

2019ல் ஆக்ஸ்போர்ட் பேருந்து நிறுவனம், “அரட்டைப் பேருந்து” என்றொரு திட்டத்தை துவங்கினர். உடனே அது பிரபலமானது. இப்பேருந்தில், குறிப்பிட்ட நபர்கள் விருப்பமுள்ள பிரயாணிகளோடு பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 30 சதவிகித பிரிட்டன் மக்கள், ஒரு வாரத்தில் ஒரு நாளிலாகிலும் அர்த்தமில்லா அரட்டை அடிக்காமலிருப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கணக்கெடுப்பிற்கேற்ப இவ்வழிமுறை அமுலாக்கப்பட்டது.

நம்மில் அநேகர், ஏற்ற சமயத்தில் பேசுவதற்கு துணை இல்லா தனிமையை அனுபவித்திருப்போம். என் வாழ்வின் மிக முக்கியமான உரையாடல்களின் மதிப்பை குறிப்பிடுகையில், கிருபை பொருந்திய உரையாடல்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. அத்தருணங்கள் எனக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் அளித்து, ஆழமான உறவுகள் வளர உதவின.

கொலோசெய திருச்சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முடிவில், தம் வாசகர்களை இயேசுவின் விசுவாசிகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை சொல்லி ஊக்கப்படுத்துகிறார். அதில் நாம் சந்திக்கும் அனைவரிடமும் நம்முடைய பேச்சின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறைகளைக் குறிப்பிடுகிறார். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்” (4:6) என எழுதுகிறார். தங்கள் உரையாடல்களில் வெறும் வார்த்தைகள் மட்டும் இடம்பெறாமல், அவ்வார்த்தைகள் கிருபை பொருந்தினவைகளாய் இருக்கவேண்டுமெனவும், அதுதான் பிறருக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கும் எனவும் நினைப்பூட்டுகிறார்.

அடுத்தமுறை உங்கள் நண்பரிடமோ, சக பணியாளரிடமோ, அல்லது பேருந்திலோ, காத்திருக்கும் அறையிலோ நீங்கள் சந்திக்கும் அறிமுகமில்லாதவரிடம் ஆழமாக உரையாட வாய்ப்பு கிடைத்தால், உங்கள் இருவருக்கும் ஆசீர்வாதம் உண்டாகும்படி பேசுங்கள்.

குடும்பத்தின் அங்கத்தினர்

ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நாடகம், இதில் ஒரு கற்பனை குடும்பம் 1900 களின் முற்பகுதியில் இருந்த சமூக கட்டமைப்பின் வழியே பயணிப்பதை பற்றி இருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரம், ஆரம்பத்தில் அந்த குடும்பத்தின் பணியாளராய் வேலை செய்து, பின்னர் எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் அதே குடும்பத்தின் இளையவளாக இருந்த மகளை திருமணம் செய்தார். குறிப்பிட்ட காலம் துரத்திவிடப்பட்ட அந்த தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்திற்கும், வீட்டுக்கும் திரும்புகின்றனர், இப்போது அந்த புது மாப்பிளை அந்த குடும்பத்தின் அங்கத்தினராக மாறுகிறார், ஒரு வேலைக்காரனாக அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளும் இப்போது குடும்பத்தின் அங்கத்தினராக அவருக்கு கிடைக்கிறது.

நாமும் கூட,"அந்நியரும் பரதேசிகளுமாய்" (எபேசியர் 2:19) முன்னர் இருந்தோம். மேலும் தேவனுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு புறம்பாயிருந்தோம். ஆனால் இயேசுவால், அணைத்து விசுவாசிகளும், அவர்கள் யாராய் இருந்திருந்தாலும், தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு "தேவனுடைய வீட்டார்" (வ.19) என அழைக்கப்படுகிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பது வியத்தகு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நமக்கு "தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."(3:12) அதினால் தேவனோடு அளவில்லாத, தடையில்லாத தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். நாம், இன்னும் பெரிய குடும்பத்தின் அங்கத்தினராய் மாறுகிறோம், நம்மை தாங்கவும், உற்சாகப்படுத்தவும் இருக்கும் விசுவாச சமூகமே அது (2:19-22). தேவகுடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் உதவும் சலுகை உடையவர்களாய், தேவனுடைய அளவிட முடியா அன்பை மகத்தாய் பற்றிகொள்ளமுடியும் (3:18).

பயம் அல்லது சந்தேகம் நம்மை சுலபமாக அந்நியரை போல உணரவைக்கும், மேலும் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாய் மாறுவதால் உண்டாகும் பலன்களை அனுபவிப்பதில் இருந்து முற்றிலுமாய் நம்மை விலக்கி போடும். ஆனால் தேவனுடைய இலவசமும், உதாரத்துவமுமான அன்பின் வெகுமதிகளின் உண்மை தன்மைக்கு செவிகொடுத்து, மீண்டும் ஒருமுறை அதை பற்றிக் கொள்ளலாம் (2:8-10). மேலும் அவருடையவர்களாய் இருப்பதினால் உண்டாகும் பிரமிப்பில் நாம் களிகூரலாம்.

வேற்றுமையைக் கொண்டாடுதல்

பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில், 608 மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள தயாரானார்கள். கல்லூரி முதல்வர், மாணவர்களின் தேசங்களின் பெயர்களை வாசித்து அவர்களை வரிசையில் நிற்கும்படி கூறினார். அப்கானிஸ்தான், பொலிவியா, போஸ்னியா... என்று அறுபது நாடுகளின் பெயர்களை முதல்வர் வாசித்தார். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், மகிழ்ச்சியோடு வரிசையில் நின்றனர். அறுபது நாடுகள்; ஒரே பல்கலைக்கழகம். 

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அழகான உதாரணங்கள், ஒற்றுமையில் வாழும் மக்களை எதிர்பார்க்கும் தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. 

சங்கீதம் 133ல் தேவ ஜனத்தின் ஒற்றுமை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் எருசலேமுக்கு பண்டிகையை ஆசரிக்கப்போகும் இஸ்ரவேலர்களால் பாடப்பெறுகிற சங்கீதம். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற வேற்றுமைகள் இருந்தாலும், ஒருமித்து வாசம்செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது (வச. 1). சகோதர சிநேகம், பனிக்கும் (வச. 3), ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களை அபிஷேகம் செய்யும்போது (யாத்திராகமம் 29:7), அவர்களின் தலையிலிருந்து தாடி வழியாக வஸ்திரத்தின் மீது விழும் அபிஷேக தைலத்துக்கும் ஒப்பிடப்பட்டள்ளது (வச. 2). இந்த உருவகங்கள் இணைந்து, ஒற்றுமை என்பது தேவனுடைய அபரிவிதமான ஆசீர்வாதத்தை வழிந்தோடச்செய்யக் கூடியது என்பதை உணர்த்துகிறது.

இனம், தேசம், வயது என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் ஆவியில் ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது (எபேசியர் 4:3). இயேசு நம்மை நடத்துகிற அந்த பொதுவான பிணைப்பை நாம் கொண்டாடும்போது, தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வேற்றுமைகளை தழுவி, மெய்யான ஒற்றுமையின் மேன்மையை நாம் அனுபவிக்கக்கூடும். 

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது.